ARTICLE AD BOX
இசைமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசைக் கச்சேரிக்காக லண்டன் கிளம்பினார்.
இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது, இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையைச் செய்யவுள்ள இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி: ஹிந்தியில் பெரிதாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம்!
இந்த நிகழ்ச்சிக்காக இன்று இளையராஜா லண்டன் கிளம்பினார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்தவர் சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், சில கேள்விகள் கேட்கப்பட்டன.
முக்கியமாக, ’ஒரு தமிழராக எப்படி உணர்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘மனுஷனாக எப்படி உணர்கிறேன் என கேளுங்கள். இப்படிப்பட்ட இடைஞ்சலான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்றார்.

தொடர்ந்து, “இசையமைப்பாளர் தேவா தன் இசையை இன்றைய இளைஞர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நான் எதற்காக வந்திருக்கிறேன்? இந்த மாதிரி அனாவசியமானக் கேள்விகளை என்னிடம் கேட்கலாமா?’ எனப் பதிலளித்தார்.
மேலும், ”உங்கள் அனைவரின் சார்பாகத்தான் லண்டன் செல்கிறேன். இது நாட்டின் பெருமை. இன்கிரிடிஃபிள் (incredible) இந்தியா மாதிரி இன்கிரிடிஃபிள் இளையராஜா நான்!” என்றார்.