ARTICLE AD BOX
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கு பின் கிரிக்கெட் உலகில் பல்வேறு திடுக்கிடும் அறிவிப்புகளை முக்கிய கிரிக்கெட் வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மோசமான தோல்விக்கு பிறகு ஒரு நாள் கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்வதாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதன் தொடர்ச்சியாக வங்கதேச அணியின் மூத்த வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான முஸ்தபிகும் ரஹீம் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் தொடரை விட்டு வெளியேறியது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிய ரஹீம், ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
இதுதான் என் விதி
இதுதொடர்பாக முஸ்தபிகுர் ரஹீம் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், " இன்று முதல் (மார்ச் 5) ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் அல்ஹம்துலில்லாவின் ஆசிகள். உலக அளவில் நமது சாதனைகள் குறைவாகவே இருந்திருக்கலாம், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: நான் என் நாட்டுக்காக களத்தில் இறங்கும்போதெல்லாம், 100%க்கும் அதிகமாக அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையை கொடுத்தேன்.
கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. இதுதான் என் விதி என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அல்லாஹ் குர்ரானில், "அவன் தான் நாடியவர்களை கண்ணியப்படுத்துகிறான், அவன் தான் நாடியவர்களை இழிவுபடுத்துகிறான்" என சொல்லியிருக்கிறார்.
கடைசியாக, கடந்த 19 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாடியதற்கு ஆதரவாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் போட்டியில் முஸ்தபிகுர் ரஹீம்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் முஸ்தபிகுர் ரஹீம், வங்கதேச அணிக்காக அதிக ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய வீரராக உள்ளார். மொத்தம் 274 ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கியிருக்கும் முஸ்தபிகுர் ரஹீம் 7795 ரன்கள் எடுத்துள்ளார். 9 சதங்களும், 49 அரைசதங்களும் அடித்துள்ளார்.
2007 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா அணியை தோற்கடித்து அப்செட் செய்த வங்கதேச அணியில் அங்கம் விகித்த முஸ்தபிகுர் ரஹீம், அந்த போட்டியில் அரைசதமடித்ததுடன், வெற்றிக்கான ரன்களையும் அடித்தார்.
அத்துடன் 2011, 2015, 2019, 2023 ஆகிய உலகக் கோப்பை தொடர்களிலும் வங்கதேசம் அணிக்காக விளையாடியுள்ளார்.
கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ரஹீம் 2 ரன்கள் அடித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற போதிலும், முஸ்தபிகுர் ரஹீம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்றே தெரிகிறது.

டாபிக்ஸ்