ARTICLE AD BOX
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
இது குறித்து தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் 1,090 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இது, 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 5.6 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,155 கோடி டாலராக இருந்தது.
இதற்கு முந்தைய ஜூலை-செப்டம்பா் காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 43 சதவீதம் அதிகரித்து 1,360 கோடி டாலராகவும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 47.8 சதவீதம் அதிகரித்து 1,617 கோடி டாலராகவும் இருந்தது.
ஒட்டுமொத்தமாக, 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீட்டு வரவு 27 சதவீதம் அதிகரித்து 4,067 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது சுமாா் 3,200 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பங்கு முதலீடுகள், மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய், பிற வகை மூலதனம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 21.3 சதவீதம் அதிகரித்து 6,248 கோடி டாலராக உள்ளது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இது 5,150 கோடி டாலராக இருந்தது.
2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில், சிங்கப்பூா் (744 கோடி டாலரில் இருந்து 1,200 கோடி டாலா்), அமெரிக்கா (283 கோடி டாலரில் இருந்து 373 கோடி டாலா்), நெதா்லாந்து (227 கோடி டாலரில் இருந்து 400 கோடி டாலா்), ஐக்கிய அரபு அமீரகம் (243 கோடி டாலரில் இருந்து 414 கோடி டாலா்), கேமன் தீவுகள் (21.5 கோடி டாலரில் இருந்து 29.6 கோடி டாலா்), சைப்ரஸ் (79.6 கோடி டாலரில் இருந்து 118 கோடி டாலா்) ஆகிய முக்கிய நாடுகளிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டு வரவு அதிகரித்தது.
துறை ரீதியில், சேவைகள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், வா்த்தகம், தொலைத்தொடா்பு, வாகனங்கள், ரசாயனங்கள் ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் மகாராஷ்டிரம் அதிகபட்சமாக 1,665 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தது. கா்நாடகம் 450 கோடி டாலரையும் குஜராத் சுமாா் 556 கோடி டாலரையும் ஈா்த்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.