ARTICLE AD BOX
பகாரா அன்னம் தெலங்கானாவில் திருமணம் மற்றும் பண்டிகைகளின் போது செய்யப்படும் மணம் மிகுந்த அரிசி உணவாகும். காய்கறிகளை சேர்க்காமல் மசாலா சற்று தூக்கலாக இருக்கும் இந்த புலாவ்வை சமைப்பதும் எளிது. பகாரா அன்னத்துடன் ஸ்பைஸியான ஹைதராபாதி மிர்ச் கா சாலன், பகாரா பைங்கன் போன்ற சைட்டிஷ்கள் பரிமாறப்படும்.
பகாரா அன்னம் செய்முறை:
தேவை:
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
ஷாஹி ஜீரா - 2 ஸ்பூன்
அன்னாசி பூ,ஏலக்காய் - தலா 1
கருப்பு ஏலக்காய் – 1
லவங்கம்,மிளகு - சிறிது
பிரியாணி இலை - 1
புதினா, கொத்தமல்லி – சிறிய கட்டு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடானவுடன் ஷாஹி ஜீராவைப் போட்டு வெடித்தவுடன் மற்ற மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு சிவந்தவுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதங்கிய பின் பொடியாக நறுக்கிய புதினா,மல்லித் தழைகளைச் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும். இந்தக் கலவையில் உப்பை சேர்த்து ஊற வைத்த பாசுமதி அரிசி மற்றும் தேவையான தண்ணீர் விட்டு உதிராக சாதத்தை வேகவைத்து எடுத்தால் அருமையான பகாரா அன்னம் ரெடி. இதில் ஷாகி ஜீரா தான் முக்கியமானதாக சேர்க்கப்படும் மசாலா.
பண்டு மிரப்பகாய பச்சடி
தேவை:
சிவப்பு மிளகாய் பழம் - 10
(காம்பு நீக்கியது)
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் பழத்தை ஈரமில்லாமல் நன்றாக துடைத்து வைக்கவும். மிக்ஸியில் மிளகாய் பழத்தை முதலில் போட்டு ஒரு திருப்பு திருப்பி பிறகு புளி, உப்பு, மஞ்சள் சேர்த்து நன்கு அரைக்கவும். சூடான வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.
அதே வாணலியில் தாராளமாக நல்லெண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்தவுடன் அரைத்து வைத்த மிளகாய் கலவையை போட்டு நன்கு வதக்கவும். பின் வெந்தயபொடி, சிறிது வெல்லம் சேர்த்து நன்கு கிளறி எடுத்து வைக்கவும். இந்த சுவையான காரசாரமான மிளகாய் பழ பச்சடி எல்லா வகையான டிபன் ஐட்டங்களுடன் ஜோடி சேரும். சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.