ARTICLE AD BOX
அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது அதிமுக உரிமை மீட்பு குழுவான ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். அதிமுக இணைப்பு குறித்து வைத்திலிங்கம் அடிக்கடி பேசி வந்தார். இந்தநிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியதுடன் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.

அடுத்தடுத்த சந்திப்புகள்
இதனிடையே, கடந்த சில தினங்களாக வைத்திலிங்கம் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரத்தநாடு அருகே உள்ள தன்னுடைய சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்தார் வைத்திலிங்கம். இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திடீரென வைத்திலிங்கத்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். நலம் விசாரிப்பு தொடர்பான சாதாரண சந்திப்பு தான் என்று சொல்லப்பட்டது.
கிட்டதட்ட 15 நிமிடங்கள் வரை தினகரன் வைத்திலிங்கத்துடன் பேசி கொண்டிருந்தார். இதையடுத்து தினகரன் சென்ற பிறகு சசிகலா தனது தம்பி திவாகரனுடன் வைத்திலிங்கத்தை சந்திக்க வந்தார். அதிமுக இணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சசிகலா. இவரும் கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கு மேல் வைத்திலிங்கத்துடன் பேசினார்.
திடீர் சந்திப்புகளின் பின்னணி
சசிகலா, தினகரன் இருவரும் வைத்திலிங்கத்தை சந்தித்தது அதிமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், "ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு திருமணத்திற்கு செல்லும் வழியில் ஒரத்தநாடு அருகே சசிகலாவும், வைத்திலிங்கமும் சந்தித்து கொண்டனர்.

அப்போது வைத்திலிங்கத்திற்கு சசிகலா சாக்லெட் கொடுத்தது நினைவு இருக்கலாம். யதேச்சையாக நடந்த இந்த சந்திப்பு அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒரத்தநாட்டில் அமமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் கலந்து கொண்டார். ஓபிஎஸ் அணியில் இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்ததால் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் இந்த நிகழ்வுகள் பார்க்கப்பட்டது. இப்படியான சூழலில் அமலாக்கப் பிரிவு வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அவரை வெகுவாக பாதித்தது.
கழுகார் : கொளுத்திப்போட்ட ஆர்.எஸ்.பாரதி... மௌனமான வைத்திலிங்கம் டு உத்தரவு போட்ட பனையூர் தலை!இது தொடர்பாக மன உளைச்சலில் இருந்த அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் செங்கோட்டையன் விவகாரம் அதிமுகவிற்குள் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில் அப்படியே புஸ்ஸானது.
கடந்த சில தினங்களாக மன்னார்குடி, சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தபடி கோயில்களுக்கு சென்று வந்தார் சசிகலா. சசிகலாவுடன் சேர்ந்து அதிமுக இணைப்பு குறித்து திவாகரன் மூவ் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. சசிகலாவும், அவரது தம்பி திவாகரன் ஒன்றாக இருக்கின்றனர். தினகரன், சசிகலாவை சந்திப்பதே இல்லை. இருவருக்குமான கருத்து வேறுபாடு அதிகரித்ததே இதற்கு காரணம்.

தினகரனும், திவாகரனும் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் ஒரே சமயத்தில், வெவ்வேறு நேரத்தில் இவர்கள் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசியுள்ளனர். இவர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் சில தினங்களில் வைத்திலிங்கத்தை சந்திக்க இருப்பதாக சொல்கிறார்கள். அப்போது இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவை அதிமுக வட்டாரத்தை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை அசைத்து பார்க்குமா என்பது போக போக தான் தெரியும்' என்றனர்.
அதிமுக வட்டாரத்தில் சிலர், "
இவர்களது சந்திப்பினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. முதலில் சசிகலாவும், தினகரனும் இணையட்டும் அதன் பிறகு அதிமுக இணைப்பு குறித்து பேசட்டும்" என்றனர்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் வட்டாரத்தில் இன்னும் பல அதிரடி சந்திப்புகள் நிகழலாம்.
``ஒரு சிலர் பதவி வெறிக்காக ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் திரள்வது தடுக்கப்படுகிறது'' - டிடிவி தினகரன்Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
