ARTICLE AD BOX
விசு ஒரு கேனை... ஷாக் ஆன ரஜினி... கிரேஸியாக பதில் தந்த கிரேஸி மோகன்
சென்னை: நகைச்சுவை கலந்த சமூக கருத்துக்களை கொண்ட நாடகங்களை இயக்கியவர் கிரேசி மோகன். அவரது எழுத்துக்களில் உருவான படங்கள் குபூர் சிரிப்பை ஏற்படுத்தும். வசனங்களும் பெரிதளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கிரேசி மோகன் - கமல், ரஜினி காம்பினேஷனில் உருவான படங்கள் அனைத்துமே எவர்கிரீன் கொண்டாட்டமாக உள்ளன. அந்த வகையில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தின் போது இயக்குநர் விசுவை பார்த்து கிரேஸி மோகன் கேனையன் என்று கூறிய சுவாரஸ்ய நிகழ்வை இதில் காணலாம்.
அபூர்வ சகோதரர்கள்: நடிகர் கமலுக்கு பிடித்த நண்பர் கிரேசி மோகன். கிரேசி மோகனின் நாடகங்களை பார்த்து ரசித்து மகிழ்ந்த கமல்ஹாசன் அவருடன் இணைந்து படத்தில் பணியாற்ற விரும்பியுள்ளார். இருவரும் முதல் முதலாக இணைந்து பணியாற்றிய படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் கிரேசி மோகன் கதை, திரைக்கதை, வசனத்தில் பெரும் பங்காற்றினார்.

குறிப்பாக நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி ஜனகராஜை பார்த்து சார் நீங்க எங்கேயோ போயீட்டீங்க என்ற வசனம் பெரிதளவில் காெண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, காதலா காதலா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கமலும் கிரேசி மோகனும் இணைந்தால் அது அதிசயத்தில் ஒன்று தான். கிரேசி மோகன் எழுத்தால் மக்களை வியக்க வைப்பார். கமல் தனது நடிப்பால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தார். இருவரும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அபூர்வ சகோதரர்கள் என்றே குறிப்பிடலாம்.
ஆனந்த கண்ணீர்: கமல் படங்களில் பணியாற்றி வந்த கிரேசி மோகனுக்கு முதல் முறையாக ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ரஜினி சாரை பார்த்த கிரேசி மோகன் சார் உங்களோட ராகவேந்திரா படத்தில் என்னால் வேலை செய்யமுடியவில்லை என்று சொன்னதும் ரஜினி, அதனால என்ன சார் ராகவேந்திரா நினைத்ததை அருணாச்சலம் முடிச்சிட்டார் என சொல்லி சிரித்துள்ளார்.
உடனடியாக கிரேசி மோகனின் மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது, அதுதான் "ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்" என பஞ்ச் சொன்னதும். வாவ் சூப்பர் சார் என அவரை ரஜினி பாராட்டினார். அப்போது கிரேசி மோகன் ஆனந்த கண்ணீரில் பேசுவது தெரியாமல் திகைத்து போனாராம். அருணாச்சலம் படத்திற்கு வசனம் எழுதியதோடு மட்டும் இல்லாமல் ரஜினியின் நண்பராகவும் கிரேசி மோகன் நடித்திருந்தார்.
விசு ஒரு கேனை: மறைந்த இயக்குநரும் நடிகருமான விசு, 5 வருடங்களுக்கு முன்பு கிரேசி மோகன் தன்னிடம் அருணாச்சலம் பட கதையை கூறியது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் விசு கூறியதாவது, "கிரேசி மோகன் என்னை பார்த்து, இந்த கதைப்படி விசு நீ ஒரு கேனை என்றதும் ரஜினி அப்படியே ஷாக் ஆகிட்டார். என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க அவர் எப்படிப்பட்ட லெஜன்ட் என கூறிவிட்டு ரஜினி சைலண்ட் ஆகிட்டார்.
அதன் பிறகு, கிரேசி மோகன் என்னிடம் வந்து சார், சின்ன ரஜினி அருணாச்சலம் எப்படி இருப்பார்னு தெரியாது, ஆனால், ரஜினியின் தந்தை சொன்ன ஒரு வாக்குக்காக 3000 கோடி சொத்தை பாதுகாப்பீங்க. இதை பங்கு போட 4 பேர் பிளான் பண்ணிட்டு இருக்காங்க, அவங்களோட சேர்ந்திருந்தா உங்களுக்கு 600 கோடி கிடைச்சிருக்கும். இந்த சொத்தை அனுபவிக்கவும் முடியாம, எடுத்துக்கவும் முடியாம அல்லாடுறது யாரு நீங்க தான். இப்ப சொல்லுங்க சார் நீங்க யாரு என்று என்னிடம் சொன்னதும் ஆமா நான் கேனயன் தான் என விசு கூறியுள்ளார். இப்படத்தில் நா அப்பவே சொன்னேன் என்ற வசனமும் குபீர் சிரிப்பை வரவைத்தது குறிப்பிடத்தக்கது.