ARTICLE AD BOX
குமரி,
உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமானோர் வருவார்கள்.
இந்த நிலையில், வார விடுமுறையான இன்று கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரிய உதயம் காண குவிந்தனர். அங்கு சூரிய உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியதும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று வருகின்றனர்.
மேலும் அங்குள்ள கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகின்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியுள்ளதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.