ARTICLE AD BOX
கேரளாவில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சம் கேரளாவில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 மாவட்டங்களில் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு மனிதர்களின் உடலில் படும்போது கண் பிரச்னை உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
இதனால், கேரளாவின் பத்தினம்திட்டா, இடுக்கி ஆகிய இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பத்தினம்திட்டாவில் புற உதா கதிர்வீச்சு குறியீட்டு எண் 11 என்ற அளவிலும், இடுக்கியிலும் 12 என்ற அளவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும்.
அதேபோல, புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் 8 முதல் 10 வரை என்ற அளவில் இருக்கும் கொல்லம், கோட்டயம், பாலக்காடு மலப்புறம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தரபும், அலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் சீரான இடைவெளியில் சுகாதாரமான தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.