ARTICLE AD BOX
மும்பை: ரூ.200 கோடி மதிப்புள்ள தனது பங்களாவை விட்டு விட்டு வாடகை வீட்டில் குடிபோகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். ஷாருக்கானுக்கு சொந்தமான மன்னத் என்ற பங்களா மும்பையில் உள்ளது. அந்த பங்களாவை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் குடும்பத்தோடு தங்க முடிவு செய்துள்ளார் ஷாருக்கான். இதற்காக அவர் வசிக்கும் பாந்த்ரா பகுதியிலேயே கட்டப்பட்டுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 4 மாடிகளை ஷாருக்கான் வாடகைக்கு எடுத்து இருக்கிறார்.
ஒவ்வொரு மாடியும் ஒரு வீடாக கட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் வாசு பாக்னானி கட்டி இருக்கிறார். இதற்காக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாசுவின் மகன் ஜாக்கி மற்றும் மகள் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தனது பாதுகாப்பு ஊழியர்கள், சமையல்காரர்கள் ஆகியோரும் தங்கவேண்டும் என்று கருதி ஷாருக்கான் 4 மாடிகளை எடுத்திருக்கிறார்.
இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.24 லட்சம் வாடகையாக கொடுப்பார். மன்னத் பங்களாவில் மேலும் இரண்டு மாடிகள் கட்ட ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். மேலும் பங்களாவின் பழைய பகுதிகளை புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த புனரமைப்பு பணிகளுக்காக அவர் சொந்த பங்களாவை விட்டு, வரும் மே மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு வாடகை வீட்டில் தங்கியிருப்பார் என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.