ARTICLE AD BOX

மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. சிவாஜியின் மறைவைத் தொடர்ந்து சம்பாஜியின் மராட்டிய படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே நடக்கும் போராக இப்படத்தின் கதை உருவாகியிருந்தது. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
"சாவா" படம் முதல் நாளில் உலக அளவில் ரூ..50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது மாறியுள்ளது. இந்த நிலையில், இப்படம் வெளியாகி 11 நாள்களிலேயே உலகளவில் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியாவில் மட்டும் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியதாகத் தெரிகிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 98வது அகில இந்திய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பிரதமர் மோடி பங்கேற்று 'சாவா' படத்தை பாராட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தை தொடர்ந்து கோவாவிலும் 'சாவா' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'சாவா' திரைப்படத்துக்கு பாஜக ஆளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சிங் வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவின் வளமான வரலாற்றுடன் சத்தீஸ்கா் மக்களை இணைப்பதையும், இளம் தலைமுறையினரிடையே தேச பக்தி மற்றும் தைரியத்தை வளா்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.'சாவா' வெறும் திரைப்படம் அல்ல; நமது வரலாற்றுப் பாரம்பரியங்கள், துணிவு, தன்னம்பிக்கைக்கு செலுத்தப்பட்ட மரியாதையாகும். சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜியின் புகழை அறிந்து கொள்ள அனைத்து மக்களும் இத்திரைப்படத்தைக் காண வேண்டும். முகலாய மன்னா்கள் மற்றும் பிற படையெடுப்பாளா்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்ட சத்ரபதி சம்பாஜியின் வீரம், தியாகம், அறிவுக்கூா்மை ஆகியவை படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேசம் மீதான அவரது அா்ப்பணிப்பை உயிா்ப்பித்து, தேசியவாத உணா்வை இத்திரைப்படம் வலுப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டாா்.