ARTICLE AD BOX
‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், ‘‘தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக நாங்கள் எப்போது கூறினோம்?’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. தேவையின்றி யார் யாரோ சொல்வதை வைத்து என்னிடம் கேட்க வேண்டாம். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என்று நாங்கள் சொன்னோமா? என எடப்பாடி கேள்வி எழுப்பினார். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தர ஒப்பந்தம் போடப்பட்டதாக பிரேமலதா கூறியிருந்த நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி அமைத்த போதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்திருந்தார். ராஜ்யசபா சீட் தங்கள் கட்சிக்கு கொடுக்கப்படும் என நம்பி இருந்தார் பிரேமலதா. ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதால் தேமுதிக ஏமாற்றம் அடைந்துள்ளது.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றிய கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எந்தப் பதிலும், அளிக்காமல் கடந்து சென்றார்.