ARTICLE AD BOX
முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மக்களவையில் ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.
லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது ஓராண்டில் 234 ரயில் விபத்துகளும், 464 ரயில் தடம்புரளும் சம்பவங்களும் நேரிட்டன. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 165 ரயில் விபத்துகளும் 230 ரயில் தடம்புரளும் சம்பவங்களும் நேரிட்டன.
மல்லிகார்ஜுன கார்கே ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 118 விபத்துகளும் 263 ரயில் தடம்புரளும் சம்பவங்களும் நேரிட்டன.
தற்போது ஆண்டுக்கு 30 ரயில் விபத்துகளும் 43 ரயில் தடம்புரளும் சம்பவங்களும் மட்டுமே நிகழ்கின்றன.
2025}26ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். கரோனா பெருந்தொற்று கால சவால்களில் இருந்து இந்திய ரயில்வே துறை மீண்டு வந்துள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஹோலி பண்டிகை காலத்தில் 604 சிறப்பு ரயில்களை இயக்கினோம். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 13,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாட் பூஜை பண்டிகைகளின்போது 8,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மகா கும்பமேளா காலகட்டத்தில் 17,330 சிறப்பு ரயில்களும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகைக் காலத்தில் 1,107 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
புதுதில்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நேரிட்டன. இதுபோன்ற கூட்ட நெரிசல்களைக் கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி கண்காணிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே நிர்வாகம் தற்போது தனது செலவு முழுவதையும் தனது வருமானத்தைக் கொண்டே சமாளித்து வருகிறது.
பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவில் ரயில் பயணக் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் அதே அளவில் உள்ளன.
நம் நாட்டில் 350 கி.மீ. பயணத்துக்கு ரயில் பயணக் கட்டணமாக ரூ.121 வசூலிக்கப்படுகிறது. இதே தொலைவு பயணத்துக்கு பாகிஸ்தானில் ரூ.436, வங்கதேசத்தில் ரூ.323, இலங்கையில் ரூ.413 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவை விட ஐரோப்பிய நாடுகளில் ரயில் பயணக் கட்டணம் 5 முதல் 20 மடங்கு அதிகமாக உள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.