ARTICLE AD BOX
ரமலான் பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரமலான் கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும் 29, 30, 31 ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக தாம்பரம் - திருச்சி ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06047) வரும் 29, 30, 31 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது திருச்சியிலிருந்து காலை 5.35 க்குப் புறப்பட்டு, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும்.
இதேபோல, தாம்பரம் - கன்னியாகுமரி விழாக்கால சிறப்பு விரைவு ரயிலானது (06037) வரும் 28 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக, கன்னியாகுமரி - தாம்பரம்சிறப்பு விரைவு ரயிலானது (06038) வரும் 31 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் காலை 8 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிருந்து இரவு 8.30 க்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு காலை 8.55 க்கு வந்தடையும்.