ARTICLE AD BOX
ஐயர் வீட்டில் உருண்டை குழம்பு மோர்லதான் செய்வாங்க. அதன் சுவையும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் சுவைக்க விரும்பும் அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
• கடலைப்பருப்பு – கால் கப்
• துவரம் பருப்பு – கால் கப்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• வெந்தயம் – கால் ஸ்பூன்
• உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
• சோம்பு – கால் ஸ்பூன்
• சீரகம் - கால் டீஸ்பூன்
• மிளகு – கால் டீஸ்பூன்
• வர மிளகாய் – 1
• தேங்காய் துருவல் – கால் கப்
• பச்சை மிளகாய் – 2
• இஞ்சி – ஒரு துண்டு
• மோர் – கால் கப்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
• உப்பு – தேவையான அளவு
• எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
(பொதுவாக ஐயர் வீட்டில் செய்யும்போது, இதில் சோம்பு சேர்க்க மாட்டார்கள். ஆனால் சோம்பு சேர்க்கும்போது, அது கூடுதல் சுவையானதாக இருக்கும். இங்கு சோம்பு சேர்த்து செய்யப்படும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடிக்காவிட்டால் நீங்கள் சோம்பை தவிர்த்துவிடலாம்)
செய்முறை
துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவேண்டும். ஊறியதை தண்ணீர் வடித்துவிட்டு, அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு, வர மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும்.
தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு நல்ல தண்ணீர் பதத்தில் கரைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். நன்றாக கொதித்தவுடன், அடுப்பை குறைத்து வைத்து ஒவ்வொரு உருண்டைகளாக அதில் சேர்க்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்துக் கொதித்ததும், மோரில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அடித்து குழம்புடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவேண்டும். தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்ற வேண்டும். ஐயர் வீட்டு உருண்டை மோர் குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்கள் சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். மோர் சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் வாசிக்க - ஐயங்கார் வீட்டு புளியோதரை செய்வது எப்படி என்று பாருங்கள்.
மேலும் இதில் உருண்டைகள் இருப்பதால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது அதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
அப்பளம் அல்லது ஒரு ஆம்லேட் தேவையென்றால் போட்டு சாப்பிடலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்