மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? - எஸ். ரகுபதி

4 hours ago
ARTICLE AD BOX

பிரதமர் மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு ஆதாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அவர்களை பழிவாங்க மாட்டோம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவர்கள் அப்படி நடந்துகொள்ளவில்லை.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுக் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆட்சியை மாற்றுவது, கட்சியை உடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு மாநிலக் கட்சிகளை பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அடியாட்களை ஏவி அச்சுறுத்துகிறார்கள். இதன் அச்சுறுத்தலால் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. அவ்வாறு சேரவில்லை என்றால் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை தொடர்கிறது.

ஹிமந்த பிஸ்வ சர்மா, சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் பற்றி தவறாகப் பேசியிருக்கிறார். அதானி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா?

தில்லி பாணியிலான நடவடிக்கை இங்கு நிறைவேறாது" என்றார்.

இதையும் படிக்க | உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே அதிமுக தீர்மானம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

இதையடுத்து மதுவிலக்கு குறித்து, "இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தைச் சுற்றிலும் எல்லா மாநிலங்களிலும் மது விற்கப்படுகிறது. எனவே இங்கே மட்டும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், இங்குள்ளவர்கள் அருகிலுள்ள மாநிலங்களுக்கு சென்று மது குடிப்பார்கள் என்ற காரணத்தால்தான் மதுவிலக்கு இங்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக்கால் இறந்துபோகவில்லை என்று எந்த கிராமங்களிலும் சொல்லவில்லை. டாஸ்மாக்கால் இறந்துவிட்டார்கள் என எந்தக் கிராமத்திலிருந்து புகார் வந்துள்ளது? மது குடிப்பது கேடு என்றுதான் நாங்களும் சொல்கிறோம்.

தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. எஞ்சியுள்ள கடைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்" எனக் கூறினார்.

மேலும் "தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி விவகாரத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதில் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் சக்தியாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனால்தான் தமிழக முதலமைச்சர் மீது பாஜகவிற்கு தனிக்கோபம்" என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

இதையும் படிக்க | அதிமுக தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - ஓபிஎஸ் விளக்கம்

Read Entire Article