ARTICLE AD BOX
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன்.
அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சி.பி.எஸ்.சி மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்.
மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் திமுகவினர் நடத்தும் சி.பி.எஸ்.சி அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடுங்கள் என்கிறாரா ஸ்டாலின்?
உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.