ARTICLE AD BOX
முதல்வர் மருந்தகங்களில் 25 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
இதையும் படிக்க : 1,000 இடங்களில் ‘முதல்வா் மருந்தகம்’ தொடக்கம்: சிறப்பம்சங்கள்!
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
”தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாகவும் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாகவும் உருவாக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
அதன்தொடர்ச்சியாக மக்களுக்கு குறைந்தவிலையில் மருந்துகள் வழங்கக்கூடிய 1,000 மருந்தகங்கள் முதல்கட்டமாக இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சாதாரண சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு அடையாளம்தான் முதல்வர் மருந்தகங்கள் திட்டம்.
அதிக விலைக்கு மருந்துகளை மக்கள் வாங்கும் நிலையை மாற்றவும், அவர்களின் சுமைகளை குறைக்கவும்தான் மருந்தகங்களை திறக்க முடிவெடுத்தோம்.
மாவட்ட மருந்து கிடங்குகளில் இருந்து மருந்தகங்களுக்கு விரைவில் மருந்துகளை அனுப்பும் விதத்தில், 3 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் தீர்ந்துவிட்டால் 48 மணிநேரத்தில் மருந்தகங்களுக்கு வழங்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகங்களில் 25 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குபவர்கள், இனிமேல் முதல்வர் மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெற முடியும்.
மருத்துவமனைகளை தேடி மக்கள் செல்லுவதை மாற்றி, மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம். 2 கோடிக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சமூக வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகம் வளர்ந்து கம்பீராக நிற்கிறது. பட்டினியின்மை, பாலின சமத்துவம், குறைந்த விலை, வேலைவாய்ப்பு, வறுமையின்மை, தரமான கல்வி, தூய்மையான குடிநீர், பொருளாதாரம் என அனைத்து குறியீடுகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக மத்திய அரசின் நிதி அயோக் தெரிவித்துள்ளது” என்றார்.