ARTICLE AD BOX
முகேஷ் அம்பானிக்கு அபராதம்.. மோடியில் கனவெல்லாம் வீணா போச்சா?
மும்பையில், இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட்நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல் உற்பத்தி திட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய தவறியதால், ரூ.1.25 பில்லியன் ($14.3 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அபராதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேக் இன் இந்தியா (Make in India) திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க அரசு பல்வேறு ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் மட்டுமல்லாமல், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (Rajesh Exports) உள்ளிட்ட நிறுவனங்களும் இதே விதியின்படி அபராதம் செலுத்த நேரிடலாம். ஆனால், ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மட்டும் திட்டத்தின் கீழ் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு, இந்திய அரசு மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 30 ஜிகாவாட்-மணிநேரம் (GWh) திறன் கொண்ட மேம்பட்ட வேதியியல் செல் (Advanced Chemistry Cell - ACC) பேட்டரிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம், இந்தியாவின் மின்சார வாகன சந்தையை அதிகரித்து, இறக்குமதி சார்ந்திருப்பதை குறைப்பது. இதற்காக, அரசாங்கம் 181 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மானியங்களை வழங்க ஒப்பந்தம் செய்தது. முதல் இரண்டு ஆண்டுகளில் 25% உள்நாட்டு மதிப்பு சேர்க்கையுடன் உற்பத்தி செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 50% உள்நாட்டு உற்பத்தி நிலையை அடைய வேண்டும். ஆனால், ரிலையன்ஸ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவை இதுவரை எந்த முக்கியமான வளர்ச்சியும் காணவில்லை. இதனால், இவை தலா ரூ.1.25 பில்லியன் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பவிஷ் அகர்வால் (Bhavish Aggarwal) தலைமையில், பேட்டரி செல் உற்பத்தியில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2023 மார்ச் மாதத்தில், ஓலா தனது சோதனை உற்பத்தியை தொடங்கியது. 2024 ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் வணிக உற்பத்தியை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்குள் லித்தியம்-அயன் (Lithium-Ion) பேட்டரி செல் உற்பத்தி செய்யும் முதலாவது நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதனால், ஓலா மீது எந்த அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு இல்லை.
ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது பேட்டரி தொழில்துறையில் இருந்து கிரீன் ஹைட்ரஜன் (Green Hydrogen) தொழில்துறையில் கவனம் செலுத்தியுள்ளது. இது, கார்பன் இல்லாத எரிசக்திக்கு முக்கியமாக கருதப்படுகிறது. மேலும், லித்தியம்-அயன் செல்களை உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க இன்னும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ரிலையன்ஸ், 2021-ல் சோடியம்-அயன் செல் (Sodium-Ion Cell) தயாரிப்பாளரான "ஃபார்டியன்" (Faradion) நிறுவனத்தை கைப்பற்றியது. மேலும், 2022-ல், சீனாவில் உற்பத்தி வசதிகள் உள்ள "லித்தியம் வெர்க்ஸ்" (Lithium Werks) நிறுவனத்தையும் கையகப்படுத்தியது. ஆனால், இதுவரை இந்தியாவில் பேட்டரி செல் உற்பத்திக்காக பெரிய முதலீடுகளை செய்ய ரிலையன்ஸ் தயங்கியுள்ளது.
உலகளாவிய அளவில் லித்தியம்-அயன் பேட்டரியின் விலை குறைந்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது மிகவும் மலிவாக உள்ளது. மேலும், பேட்டரி தொழில்நுட்பம் மாறிவரும் சூழலில், இந்திய உற்பத்தியாளர்கள் நெகிழ்வான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேட்டரி உற்பத்திக்கான முதலீடு மிக அதிகமாக உள்ளது - ஒரு ஜிகாவாட்-மணிநேரத்திற்கான (GWh) உற்பத்திக்கு $60-$80 மில்லியன் வரை செலவாகும். சர்வதேச நிறுவனங்களின் போட்டி, இந்திய உள்நாட்டு நிறுவனங்களை முடிவெடுக்க மந்தமாக்கியுள்ளது.
ப்ளூம்பெர்க் NEF ஆய்வாளர் ஜியாயான் ஷி (Jieyang Shi) கூறியதாவது, "கடந்த ஆண்டு, பேட்டரி செல் உற்பத்தியில் முதலீடு செய்வது ஆபத்தாக இருந்தது. உலகளாவிய அளவில் அதிகப்படியான உற்பத்தி திறன் மற்றும் சந்தை மாற்றங்கள் ஏற்பட்டதால், நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்ய தயங்கின."
ரிலையன்ஸ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட உள்ள ரூ.1.25 பில்லியன் அபராதம், மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கே இது ஒரு சிறிய அபராதமாகவே இருக்கலாம். ஆனால், இது இந்திய அரசின் உள்நாட்டு உற்பத்தி திட்டங்களுக்கு ஒரு பெரும் பின்னடைவை உருவாக்கலாம்.