ARTICLE AD BOX
கடலூர் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கடலூரில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்தற்காகவும் மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல, சென்னை புத்தக்கண்காட்சி போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா 22.03.2025 முதல் 31.03.2025 வரை நடைபெற உள்ளது.
புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் புத்தகம் வாசித்தல், புத்தகம் குறித்து விவாதித்தல், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்களும் நடைபெறவுள்ளது.
புத்தகத்திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. புத்தகத்திருவிழா அரங்கில் கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு, புதினம், கவிதை, பண்பாடு, அறிவியல், ஆன்மீகம், போட்டித் தேர்விற்கான புத்தகங்கள், சரித்திர மற்றும் சமூக நாவல்கள் என அனைத்து விதமான புத்தகங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கிடும் வகையில் 10 ரூபாய் முதல் அனைவருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.
புத்தகத் திருவிழாவிற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் காலை, மாலை என இரு வேலைகளிலும் அதிகளவில் பங்கேற்க உள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்துசெல்லும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவும், போக்குவரத்து நெரிசலின்றி வாகன நிறுத்தங்கள் அமைத்து தர வேண்டும். மேலும், அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி மற்றும் தினசரி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்களை நியமித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தினந்தோறும் போதுமான மருத்துவக்குழு அமைத்து தரவும், அவசர ஊர்தியினை தயார்நிலையில் வைக்க வேண்டும். மாவட்ட தீயணைப்பு அலுவலர் புத்தக திருவிழாவிற்கு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும்.
மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவிய போட்டி, மகளிர் மேம்பாடு, சாலை பாதுகாப்பு, போதை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். பெருந்திரள் வாசிப்பில் மாணவர்களை பங்கேற்றிடவும், கலை நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்றிடவும், மாணவர்கள் பார்வையிடும் வண்ணம் கோளரங்கம் ஏற்பாடு செய்திடவும், தொலைநோக்கி நிறுவுவதற்கும், மாணவர்களுக்கு ஆங்கில வாசிப்புத்திறன் குறித்து அரங்கம் அமைத்து பயிற்சி வழங்குதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் கலைஞர்கள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி கலைஞர்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் ஏற்பாடு செய்து, மரபு வழிமுறைப்படி உபசரிக்க வேண்டும்.
விழா அரங்கு, நுழைவு வாயில், மேடை அமைப்பு, புத்தக அரங்குகள், பார்வையாளர்கள் அமரும் அரங்கம், தேவையான நாற்காலிகள், உணவரங்கம் ஏற்படுத்தி தருதல், மைதானத்தினை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேவையான அளவு சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்தல், தன்னார்வலர்களை பணியமர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவினை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது அறிவுச்சார்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கும் இடமாகவும், நண்பர்களுக்கு பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையினை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும் நடைபெற உள்ளது. எனவே, அனைவரும் இந்த புத்தகத்திருவிழாவினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், விழாவிற்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் தங்களது ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் இரா.சரண்யா அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.