ARTICLE AD BOX
பயம் என்பது மனித உணர்வுகளில் பொதுவாக காணப்படும் ஒன்று. சிலருக்கு விலங்குகள் என்றால் பயம், சிலருக்கு நீர் என்றால் பயம் . இப்படி ஏதாவது ஒன்றின் மீதான பயத்தை மருத்துவ உலகம் ஃபோபியா என்று அழைக்கிறது. ஆனால் சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதும் மருத்துவம் மீதுமே சிலருக்கு பயம் இருந்தால்?
சிறு வயதில் ஊசி, மருந்து என்றால் பயந்து அலறும் குழந்தைகள் வளர வளர இயல்பாக மருத்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் வயது வந்த பின்னும் மருத்துவ பயம் இருப்பது முரணான விஷயம். இந்த பயம் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.
மெடிசின் ஃபோபியா - மருந்துப் பயம் அல்லது மருத்துவ வெறுப்பு என்றும் அறியப்படுகிறது. இது மருந்து அல்லது மருத்துவ சிகிச்சை குறித்த அதிகப்படியான அல்லது பகுத்தறிவற்ற பயமாகும். மருத்துவ பயம் பற்றிய சில முக்கிய விவரங்கள் இங்கே:
மருந்துகளின் மீதான ஃபோபியா 3 வகைகளாக உள்ளன.
முதல் வகை Pharmacophobia (பார்மகோபோபியா) - மாத்திரைகள் அல்லது மருந்துப் பொருள்களின் மீதான பயம்.
இரண்டவது Medicophobia (மெடிகோபோபியா) - மருத்துவ சிகிச்சை அல்லது அதன் நடைமுறைகள் குறித்த பயம்.
மூன்றாவதாக Trypanophobia (டிரைபனோபோபியா) - ஊசி அல்லது சிகிச்சை ஊசிகள் பற்றிய பயம்.
*ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருந்து அல்லது மருத்துவ சிகிச்சையை எதிர்கொள்ளும் போது கவலை;
*பீதியுடன் மருத்துவருடனான சந்திப்புகள், சிகிச்சைகள் அல்லது மருந்துகளைத் தவிர்த்தல்;
*அதிகரித்த இதயத் துடிப்பு அல்லது படபடப்பு;
*அதிக வியர்த்தல் அல்லது நடுக்கம்;
*மருந்து அல்லது மருத்துவ சிகிச்சை பற்றி நினைக்கும் போது குமட்டல் அல்லது வாந்தி வரும் உணர்வு;
போன்ற அனைத்தும் மருந்து ஃபோபியாவின் அறிகுறிகள் ஆகும்.
மருந்துகளுக்கு மோசமான எதிர்வினை போன்ற மருத்துவ அனுபவங்கள், மருந்து உட்கொள்ளும் போது கட்டுப்பாடு அல்லது சுய உணர்வு இழக்க நேரிடும் என்ற பயம், மருந்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் அல்லது சிக்கல்கள் பற்றிய பயம், மருந்து அல்லது மருத்துவ சிகிச்சை பற்றிய புரிதல் இல்லாமை, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரிடம் இருந்து கேட்டறிந்த மோசமான உதாரணம், என மருத்துவ பயத்தின் காரணங்கள் நமது கடந்தகால அதிர்ச்சிகரமான மருத்துவ அனுபவங்களில் இருந்தே துவங்குகின்றன.
மருத்துவ பயத்தினை படிப்படியாக குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பில் அறிவாற்றல் நடத்தை சிகிச்சையானது (CBT) தனிநபர்களின் எதிர்மறை சிந்தனை முறைகள் மற்றும் நடத்தைகளை மாற்ற உதவுகின்றன. தீவிரமான சில சந்தர்ப்பங்களில், கவலை அல்லது பய அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் மனநல நிபுணர் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்படலாம்.
இந்த பயம் நீங்க தேவையான நேரங்களில் ஆரம்பம் முதலே மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய சந்தேகங்களை தெளிவாகக் கேட்டு நாமே கற்றுக் கொள்ள வேண்டும். ஆதரவு தரும் நம்பகமான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரை மருத்துவ சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மருந்துகள் நம் நலனைக் காக்கவே எனும் நம்பகத்தன்மையை மனதில் பதிய வைத்து படிப்படியாக மருத்துவ நன்மைகளை பெற்றால் மருந்து ஃபோபியா அகலும்.