ARTICLE AD BOX
மனித உடலுக்கு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்தான் வயிறு நிரம்பிய மனநிறைவை அளிக்கின்றன. இதுதான் பசி ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகின்றது. மேலும், நம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் நிலையாக பராமரிக்கின்றது. முக்கியமாக, தசைகள், சருமம், நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் கட்டமைப்பில் புரோட்டீன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின், அந்த சத்துக்கள் செரிமான மண்டலத்தால் சரியாக ஜீரணிக்கப்பட்டால் மட்டுமே இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒழுங்காக நடைபெறும். ஆனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான செரிமானம் நடப்பதில்லை. சிலருக்கு புரோட்டீன் செரிமான மண்டலத்தால் சரியாக ஜீரணிக்கப்படாமல் போகலாம். இதன் விளைவாக பல்வேறு செரிமானம் தொடர்பான பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படலாம்.
ஒருவரது உடலில் புரோட்டீன் சரியாக ஜீரணிக்கப்படாமல் இருந்தால் கால்கள், கைகளில் அடிக்கடி வீக்கங்கள் ஏற்படலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தத்தில் இருக்கும் புரோட்டீன்களில், அல்புமினும் திசுக்களில் திரவம் தேங்காமல் தடுக்கும். இருப்பினும் ஒருவரது கை, கால்களில் வீக்கம் ஏற்பட வேறு பல காரணங்களும் இருக்கலாம். எனவே, திடீரென்று காரணமின்றி வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நாம் உட்கொள்ளும் புரோட்டீன் உடலுக்கான எரிபொருளாக செயல்படுகிறது. நாம் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிட விரும்பினால், அதற்கு நிறைய புரோட்டீன் தேவைப்படுகிறது. ஆய்வுகளின்படி, புரோட்டீன் உணவுகளை உட்கொண்டால் நாள் முழுவதும் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வை உணர முடியும். ஆனால், இந்த புரோட்டீன் சரியாக ஜீரணிக்கப்படாமல் இருந்தால், அது அடிக்கடி ஒருவருக்கு பசியை ஏற்படுத்தும்.
நிபுணர்களின் கூற்றுப்படி புரோட்டீன் குறைவாக உட்கொண்டால், காயங்கள் குணமாக நேரம் எடுக்கும். மேலும், அடிக்கடி சுளுக்கு மற்றும் தடுக்கி விழுவது போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே, நமக்கு காயங்கள் ஏற்பட்டு, போதுமான சிகிச்சை மேற்கொண்டும் காயங்கள் ஆறாமல் இருந்தால், உடலில் புரோட்டீன் சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை என்பதை உணர வேண்டும்.
ஆய்வுகளின்படி, ஒருவர் ஒரு வாரம் புரோட்டீன் எடுக்காமல் இருந்தால் அது அந்நபரின் தசைகளை பாதித்து, உடலை மெலிந்துபோகச் செய்யும். அதுவும் இப்படியே புரோட்டீன் உடலால் ஜீரணிக்கப்படாமல் இருந்தால், அது தசைகளின் பலத்தை இழக்கச் செய்து, அவரை பலவீனமாக்கிவிடும். மேலும், வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, உடலில் இரத்த சோகையையும் ஏற்படுத்தலாம். எனவே, இந்த உடல் சோர்வையும், பலவீனத்தையும் சமீப காலமாக சந்தித்து வந்தால், உடலில் புரோட்டீன் ஜீரணமாவதில் பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது.
உடலில் புரோட்டீன் போதுமான அளவு இல்லாமல்போனால், அது ஒருவரது மனநிலையையும் பாதிக்கும். உயிரணுக்களுக்கு இடையே தகவல்களை அனுப்ப, அமினோ அமிலங்களால் ஆன நரம்பியல் கடத்திகள் எனப்படும் ரசாயனங்களை நமது மூளை பயன்படுத்துகிறது.
எனவே, உடலில் புரோட்டீன் இல்லாமல்போனால், உடலால் அந்த நரம்பியக்கடத்திகளை போதுமான அளவு உருவாக்க முடியாது. இதன் விளைவாக மூளையின் செயல்பாடு குறைந்துபோகும். எனவே, நமது அன்றாட உணவில் போதுமான அளவு புரோட்டீன் இருப்பதை நாம் உறுதி செய்துகொள்வது நல்லது.