ARTICLE AD BOX
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பொதுவான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் பயன்பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே உள்ள ஓய்வூதியத் திட்டங்களை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தில் யுனிவர்சல் பென்சன் ஸ்கீம் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலம் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட அனைவரும் தங்கள் ஓய்வூதியத்தை பங்களிக்கவும் கட்டமைக்கவும் முடியும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்தத் திட்டத்தை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள்,விவசாயிகளுக்கென ஓய்வூதிய திட்டங்கள் என எடுத்துக்கொண்டால் அடல் பென்ஷன் யோஜ்னா திட்டம் , பிரதான் மந்திரி யோகி மந்தன் யோஜ்னா (பிஎம்-எஸ்ஒய்எம்) ஓய்வூதிய திட்டம், பிரதான் மந்திரி கிஸான் மந்தன் யோஜ்னா போன்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இதில் 60 வயது வரை முதலீடு செய்தால் 60 வயதிற்கு பிறகு பென்சன் கிடைக்கும்.
இதற்கிடையில் புதிதாக பொதுவான ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தில் மாத சம்பளம் பெறுவோர், சுயதொழில் செய்வோர் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் அமையும். அதே நேரத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் EPFO போல அனைவரும் கட்டாயமாக பங்குபெற வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல், விருப்பப்பட்டவர்கள் மட்டும் இணைந்து பயன்பெறும் வகையில் அமையலாம். இந்த திட்டத்தில் அரசு தரப்பில் இருந்து எந்த பங்களிப்பும் கொடுக்கப்படாது என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் இது குறித்தான விஷயங்களை பரிசீலித்து வரும் நிலையில் , முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.