ARTICLE AD BOX
புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை கேட்ட பொதுநல மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் மூன்றாவது வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘ஆந்திரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உட்பட நாடு முழுவதிலும் சட்டவிரோத மணல் குவாரிகள் நடத்தப்படுகிறது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றமும் நடைபெறுகிறது.
எனவே சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரத்தில் நடைபெறும் ஊழலை வெளிக்கொண்டு வரும் விதமாக அதனை முழுமையாக சிபிஐ விசாரணை அமைப்புக்கு மாற்றி அமைத்திட ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக மணல் எடுக்கும் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கையை வைத்தனர்.
அதில், ‘‘இந்த விவகாரத்தில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், அவகாசம் வழங்கி வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு அவகாசம் வழங்குவதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
The post மணல் குவாரிகள் விவகாரம் மாநிலங்கள் பதிலளிக்க கூடுதல் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.