ARTICLE AD BOX
கோவை : கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கோவை - திருப்பதி ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் எல்.எச்.பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்ட தூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகிறது.
சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் பயணம் செய்யலாம், மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் அதிவேகமாக இயக்க சௌகரியமாக இருக்கும்.
ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் இணைக்கப்படுவதால் வேகமாக பயணித்தாலும், சரியான இடத்தில் நிறுத்த முடியும். விபத்தின் போது ஒரு பெட்டி, மற்றொரு பெட்டியுடன் மோதி சேதமடையாது. இந்தப் பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
அத்துடன் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏ.சி. பெட்டியில் படுக்கை வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும்.
ஏற்கனவே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த நவீன பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்பொழுது கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் பொருத்தி இன்று முதல் இயக்கப்பட்டது.
காலை 6:10 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.25 மணிக்கு திருப்பதியை சென்றடையும், வாரந்தோறும் செவ்வாய், வியாழன் , வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
திருப்பதியில் இருந்து இந்த ரயில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு கோவை வந்தடைகிறது.