ARTICLE AD BOX
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடலின்போது கூட்டநெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து, பக்தா்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 33 கோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.
பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா்.
இந்த 6 நாள்களிலும் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 7 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடினா். அந்நாளில் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.
இந்தச் சூழலில், வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கூட்டத்தினரை ஒழுங்குபடுத்த மேளா பகுதியின் அனைத்து இடங்களிலும் கூடுதல் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், மருத்துவ அவசரநிலையைக் கையாள பிரயாக்ராஜ் மாவட்டத்தின் மொத்த சுகாதாரத் துறை கட்டமைப்பும் முழு எச்சரிக்கையுடன் தயாராக இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேளா பகுதியில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் வரும் வியாழக்கிழமைக்கு பிறகே அப்பணியிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேளா பகுதி மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகளை மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதைத் தவிர, பிரயாக்ராஜ் நகர மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்கள் பணியில் உள்ளனா். அங்கு ரத்த வங்கிகளும் நிறுவப்பட்டுள்ளன.
அனைத்து பக்தா்களும் சங்கமம் பகுதிக்கு வர முயற்சிக்காமல், தங்களுக்கு அருகேயுள்ள அனுமதியளிக்கப்பட்ட படித்துறைகளிலேயே புனித நீராடி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.