ARTICLE AD BOX
வாஷிங்டன்,
அமெரிக்க மாகாணமான தெற்கு டகோட்டாவில் ஜூலை 1 முதல் பள்ளிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொது கழிப்பறையை பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக கடந்த ஜனவரியில் அவர் பதவிக்கு வந்ததில் இருந்து திருநங்கைகளின் உரிமைகளைக் குறைக்கும் நோக்கில் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டு வருகிறார்.
அந்தவகையில் அங்குள்ள தெற்கு டகோட்டா மாகாணத்தில் திருநங்கைகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே இந்த தடையானது வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அம்மாகாண கவர்னர் லாரி ரோடன் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் அந்த வசதியைப் பயன்படுத்துவதைத் தடுக்க அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், பள்ளி அல்லது மாநிலத்திற்கு எதிராக அறிவிப்பு மற்றும் தடை உத்தரவு நிவாரணம் பெறவும் இந்த மசோதா அனுமதிக்கிறது.
அமெரிக்காவில் இந்த தடையை பிறப்பிக்கும் 13-வது மாகாணம் இதுவாகும். டென்னசி, மொன்டானா மாகாணத்திலும் இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.