ARTICLE AD BOX
தமிழகத்தின் மாநில மரம், பனை மரம் ஆகும். இதை நம்மில் பலர் மறந்திருக்கலாம். நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால் என பனையின் வேர் முதல் இலை வரை அனைத்துமே மனிதனுக்கு பயன்படக்கூடியவை. அதனால் பணை பூலோகத்தின் கற்பகத்தரு என அழைக்கப்படுகிறது.
நாட்டுப்பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை. பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை என மொத்தம் 33 வகையான பனை மரங்கள் உள்ளன. இவற்றில், தமிழகத்தில் நாட்டுப்பனை, கூந்தப்பனை, தாளிப்பனை மட்டுமே உள்ளன. தமிழகத்தில் காகிதம் அறிமுகமாகும் காலம்வரை பனை ஓலையே எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
நம் நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் தமிழகத்தில் 50 கோடி பனைமரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் 8 கோடி பனைமரங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 5 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பழங்காலத்தில் ஓட்டுவீடுகளும், குடிசைகளும் அதிகமாக இருந்தன. அதில், மரச்சட்டங்கள் செய்வதற்கும், கூரை வேய்வதற்கும் பனைமரங்கள் தேவைப்பட்டன. தற்போது வீடுகள் கான்கிரீட் கட்டிடங்களாக மாறிவிட்டதால், நமக்கு பனையின் பயன் தேவையின்றி போனது. தென்னை மரத்தைவிட, பனை மரத்தினால்தான் நிறைய பயன்கள் உண்டு. ஆனால், தென்னை மரத்தைக் கொண்டாடுவதைப்போல, பனை மரத்தை நாம் கொண்டாடுவதில்லை. ஒரு பனை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 150 லிட்டர் பத நீர், ஒன்றரை கிலோ ஈர்க்கு, 16 நார் முடிச்சுகள், 24 கிலோ பனைவெல்லம் என பல பயன்கள் கிடைக்கின்றன.
கள்ளில் கலப்படம் உள்ளதாக கடந்த 1.1.1987-ம் ஆண்டு தமிழகத்தில் கள்ளுக்கு தடைவிதித்து அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதேவேளையில் கள்ளில் கலப்படம் செய்வதை தடுத்து, கேரளாவில் இன்றும் கள் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கற்பக விருட்சம், மாநில மரம் என்றெல்லாம் பெயரளவில் மட்டும் தான் சொல்லிக் கொள்கிறோம். பனையை காக்க நாம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், பனை மரங்களை பாடப்புத்தகத்திலும், அருங்காட்சியகத்தில் புகைப் படங்களாகவும்தான் பார்க்க முடியும்.
சீனி சர்க்கரையால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதை அறிந்த பலர், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டை பயன்படுத்த தொடங்கி விட்டனர். சாலையோரங்களில் ஆங்காங்கே கருப்பட்டி காபி, பனங்கற்கண்டு காபி என விற்பனைக் கடைகளை பார்க்க முடிகிறது. இதுமட்டும் போதாது. நீர்நிலை கரையோரங்களில் பனை விதைகளை நடவு செய்து, அவற்றை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்களிடையே பனையை காப்பதற்கான அவசியம் தொடர்பாக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கரும்பைவிட 8 மடங்கு சர்க்கரையை கொடுக்கும் பனை மரத்தை காக்க நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதனால், சுமார் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, பனை மரங்களை நட வேண்டுமென்ற ஆர்வமும் மக்களிடம் பெருகும். பனை பொருட்களை ஏற்றுமதி செய்தால், நாட்டில் அந்நிய செலாவணியும் பெருகும்.
அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் மரம் நடும் விழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில், பனை விதைகளும் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் ஒரு பனை மரத்தையாவது நட வேண்டும். அப்போதுதான் பனையை காக்க முடியும்.