ARTICLE AD BOX
ஆராய்ச்சி பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பட்ச் வில்மோர் என்பவருடன், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறந்த சுனிதா, விண்வெளி நிலையத்தை அடைந்து ஆராய்ச்சியையும் தொடங்கினார்.
பூமிக்குத் திரும்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அது நடைபெறாமல் போனது. இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா கைகோர்க்க, அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இறுதியில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன்-9 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் அனுப்பப்பட்ட 4 வீரர்களும், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய, அவர்களை மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார் சுனிதா.
பூமிக்குத் திரும்புவதற்கான ஆயத்தப்பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், சுனிதா வில்லியம்சுடன், பட்ச் வில்மோர், அமெரிக்க வீரர் நிக் ஹாக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் டிராகன் விண்கலம், விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது.
இன்று காலை சரியாக 3.27 மணிக்கு (இந்திய நேரப்படி) சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து SpaceX-ன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்