புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

3 hours ago
ARTICLE AD BOX

கோப்புப்படம்

ராவல்பிண்டி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம் அணியை எதிர்த்து மோதுவதாக இருந்தது. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டதால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து விட்டன. எனவே இந்த போட்டி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவ்விரு அணிகளுக்கும் கடைசி ஆட்டமாகும். இதனை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் முனைப்பில் இருந்தன.

இந்நிலையில் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி பகுதியில் பெய்த மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் போட்டி நடைபெறும் என நடுவர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால், மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால், போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

இதன்படி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல், தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோல்வியும், வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி ரத்தானதால் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடம் பிடித்துள்ளது.

கடைசியாக நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சாம்பியன் அணியான பாகிஸ்தான், அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு புள்ளி கூட பெறாமல் வெளியேறியிருந்தால், அது வரலாற்றிலேயே மோசமான நிகழ்வாக அமைந்திருக்கும்.

ஆனால், மழையின் தயவால் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அதனால், பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற 8 அணிகளில், பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்கள் மட்டுமே இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மற்ற 7 அணிகளில் ஒருவராவது சதம் அடித்துள்ளனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணி தனிப்பட்ட வீரர்கள் சார்பிலும், ஒட்டுமொத்த அணியாகவும் பல மோசமான சாதனைகளை செய்து இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

Read Entire Article