ARTICLE AD BOX
புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மனதை கடுமையாக பாதிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார். இப்படி வீடுகளை இடிப்பது என்பது அரசியலமைப்பின் மீது புல்டோசரை இயக்குவது போன்றதாகும் என்று நீதிபதி உஜ்ஜால் பூயான் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் சட்டத்தின் ஆட்சியை மறுப்பதாகவும், இதனை தடுக்காவிட்டால் நீதிபரிபாலன அமைப்பை அது அழித்துவிடும் என்றும் நீதிபதி உஜ்ஜால் பூயான் எச்சரித்துள்ளார். ஒருவர் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் அந்த வீட்டில் அவரது தாய், மனைவி, சகோதரி, குழந்தைகள் என்று பலர் இருப்பார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்கள் எங்கு போவார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் குற்றவாளி என்பதற்காக அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்? என்றும் நீதிபதி உஜ்ஜால் பூயான் கேள்வி எழுப்பியுள்ளார்.