ARTICLE AD BOX
புதுச்சேரியில் இனி நிரந்த சாதி சான்றிதழ் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அவர் இன்று வெளியிட்டார்.
இன்றைய தினம் (மார்ச் 17) சட்டப்பேரவையில் அவர் உரையாற்றினார். அப்போது, "புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தபட உள்ளது. நிர்வாக செயல்முறைகளை எளிதாக்கி மக்களுக்கு சேவையாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டும் அளிக்கப்படும் இந்த சாதி சான்றிதழ் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வருவது தவிர்க்கப்படும்..
மேலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசல் குறைந்து செயல்திறன் அதிகரிக்கும். புதுச்சேரியில் ஃபீஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மீட்பு மற்றும் சீரமைப்பு செய்வதற்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.
குடிசை வீடுகளுக்கு ரூ. 8000, பகுதி சேதமடைந்த கல் வீடுகளுக்கு ரூ. 6500, பகுதி சேதமடைந்த ஓட்டு வீடுக்கு ரூ. 4000 வழங்கப்படும். இதற்காக ரூ. 33 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் அரசுக்கு செலவு ஆகும்" எனக் கூறினார்.