ARTICLE AD BOX

டெல்லி,
1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான ''விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. இதற்கிடையில், இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனது சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் பணிவுகொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.