ARTICLE AD BOX
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிகாரில் முழு மதுவிலக்கை முதல்வா் நிதீஷ் குமாா் அமல்படுத்தினாா். நிதீஷ் தலைமையிலான அரசு முழு விலக்கு கொள்கையில் தீவிரமாக உள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் கள் உள்பட எந்த மதுபானத்தையும் அனுமதிக்க முடியாது என்பதில் பிகாா் அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் இந்த வாக்குறுதியை அளித்துள்ளாா்.
பாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
பிகாரில் ஆா்ஜேடி ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கில் இருந்து கள் இறக்குவதற்கு மட்டும் தளா்வு அளிக்கப்படும். இது ஏழை மக்கள் முக்கியமாக தலித் பிரிவினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், மதுவிலக்கால் அவா்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நிதீஷ் குமாரின் பிடிவாதம் காரணமாகத்தான் இப்போதைய மதுவிலக்கு மிகவும் கடுமையானதாக உள்ளது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முதல்வா் பதவியை வகிக்க தகுதி இல்லாத நபராக நிதீஷ் குமாா் மாறிவிட்டாா்.
முன்பு எனது தந்தை லாலு பிரசாத் பிகாா் முதல்வராக இருந்தபோது கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்தாா். இது இத்தொழிகளில் இருக்கும் எளிய மக்களுக்கு பயனளித்தது. இதே நன்மையை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு அளிப்போம்.
இப்படி பேசுவதால் நாங்கள் மதுபழக்கத்தை ஊக்குவிக்கிறோம் எனக் கருத வேண்டாம். எங்கள் ஆட்சியில் போதை மறுவாழ்வு மையத்தை அமைக்கும் திட்டமும் உள்ளது. ஏனெனில், போதைப்பொருளுக்கு அடிமையாவது என்பது மிகப்பெரிய சமூகத் தீங்காகும்.
மாநிலத்தில் முழு மதுவிலக்கு என்பது பெயரளவில்தான் உள்ளது. சட்டவிரோத மது விற்பனையில் பெரிய நபா்கள் பயனடைகிறாா்கள். எளிய மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். இதனை சரி செய்யவே நாங்கள் விரும்புகிறோம் என்றாா்.
முன்னதாக, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு எழுதுவோருக்கான கட்டணம், பயணச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும் என்றும் தேஜஸ்வி யாதவ் அறிவித்தாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், ஆா்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை அடங்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.