ARTICLE AD BOX
பி.இ. பட்டத்துடன் பி.எட். முடித்தவா்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிவதற்கு தகுதியானவா்கள் என்று உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயா் கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பானது வேலைவாய்ப்பு வகையில் பி.இ. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.
இதேபோல், பி.இ. படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவா்கள் பி.எட். (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக (இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியா்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடங்களைப் பயிற்றுவிக்கத் தகுதியானவா்களாவா் என அதில் கூறப்பட்டுள்ளது.