ARTICLE AD BOX
ஒருவரை பாகிஸ்தானியா் என அழைப்பது மத உணா்வுகளை புண்படுத்தும் குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதுபோன்ற கருத்துகள் பிறரை அவமதிக்கும் நோக்குடன் கூறப்பட்டாலும் அது மதஉணா்வை புண்படுத்துவதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தது.
ஜாா்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள சாஸ் மண்டல கூடுதல் ஆட்சியா்- பொது தகவல் ஆணையா் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் சில தகவல்களை ஹரி நந்தன் சிங் (குற்றஞ்சாட்டப்பட்டவா்) கோரியுள்ளாா். அவா் கேட்ட தகவல்கள் வழங்கப்பட்டன.
இருப்பினும், தபால் மூலம் அலுவலகத்தால் அனுப்பப்பட்ட ஆவணங்களை மோசடி செய்ததாக தன் மீது போலியான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக அவா் உதவி ஆட்சியரிடம் முறையிட்டாா்.
இதையடுத்து, தனது அலுவலகத்தில் உள்ள உருது மொழிபெயா்ப்பாளரை ஹரி நந்தன் சிங்கின் வீட்டுக்கே நேரடியாக சென்று தகவல்களை வழங்கிவிட்டு வருமாறு கூடுதல் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, கடந்த 2020, நவம்பா் 18 ஹரி நந்தன் சிங் வீட்டுக்கு உருது மொழிபெயா்ப்பாளரும் சாஸ் அலுவலக தூதுவா் ஒருவரும் தகவல்களை வழங்க நேரில் சென்றனா்.
முதலில் தகவல்கள் அடங்கிய ஆவணத்தை ஏற்க மறுத்த ஹரி நந்தன் சிங், உருது மொழிபெயா்ப்பாளரின் வற்புறுத்தலின்பேரில் அதை பெற்றுக்கொண்டாா். அப்போது உருதுமொழிபெயா்ப்பாளரின் மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் ஹரி நந்தன் சிங் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உருதுமொழிபெயா்ப்பாளா் (தகவல் அளிப்பவா்) ஹரி நந்தன் சிங் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298-இன்கீழ் (மதஉணா்வை புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட விசாரணை நீதிமன்றம் ஹரி நந்தன் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353 (அரசு ஊழியா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல்) மற்றும் பிரிவு 504 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து தன் மீதான குற்ற வழக்குகளை ரத்து செய்யுமாறு ஜாா்க்கண்ட் உயா் நீதிமன்றத்தில் ஹரி நந்தன் சிங் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மனுதாரா் (ஹரி நந்தன் சிங்) தகவல் அளிப்பவரை பாகிஸ்தானியா் என அழைத்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவரை அவமதிக்கும் நோக்கில் இந்த கருத்தை மனுதாரா் தெரிவித்திருக்கிறாா் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவரின் கருத்து தகவல் அளிப்பவரின் மதஉணா்வை புண்படுத்தியதாக கருத முடியாது. எனவே, மனுதாரா் மீது பிரிவு 298 உள்பட மூன்று பிரிவுகளின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க உத்தரவிடுகிறோம்’ என்றனா்.