ARTICLE AD BOX
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு மார்ச் 13-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு விடுமுறையை தவிர்த்து அந்தந்த பகுதிகளில் நடைபெறும் விழாக்கள், பண்டிகைகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு வேலைநாளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்.

அந்த வகையில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 13-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டு மாசி மக பெருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெறும் மாசி மக பெருவிழாவில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த ஏராளமான கோயில்களை சேர்ந்த உற்சவர்கள் இங்கு எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மக பெருவிழா மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளது. வைத்திக்குப்பம் கடற்கரையில் உள்ள இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் வரும் 13-ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் அன்றைய தினம் நடைபெற உள்ள பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.