ARTICLE AD BOX
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்துக்கான பத்து புதிய திட்டங்களை அறிவித்தார்.
அதன் விவரம்:
Ø முதல் அறிவிப்பு - திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன் பெறும் வகையில், 130 கோடி ரூபாய் செலவில் வெலிங்டன் ஏரியில், கரைகளை பலப்படுத்துவது, வாய்க்காலை புனரமைப்பது போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
Ø இரண்டாவது அறிவிப்பு - கடலூர் மாநகராட்சியில் இருக்கின்ற மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.
Ø மூன்றாவது அறிவிப்பு - நம்முடைய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் – சட்டமன்ற உறுப்பினருமான திரு.வேல்முருகன் அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கையை எழுப்பினார். எங்களுக்குக் கூட சில நேரம் கோபம் வந்தது. ஆனால் அந்த கோபம் இருக்கக்கூடிய இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வார்கள். எனவே, அந்த உணர்வோடு நான் இங்கே மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். பண்ருட்டி தொகுதியில், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று, 15 கோடி ரூபாய் செலவில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
Ø நான்காவது அறிவிப்பு - புவனகிரி மற்றும் சிதம்பரம் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், முட்லூரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை இருக்கும் இரண்டு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
Ø ஐந்தாவது அறிவிப்பு - நெய்வேலி பகுதியில், கெடிலம் ஆற்றங்கரையில், செம்மேடு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு கிராமங்களில் 36 கோடி ரூபாய் செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
Ø ஆறாவது அறிவிப்பு - திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், எம்.புதூர் முதல் திருவந்திபுரம் வரை உள்ள சாலை, 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
Ø ஏழாவது அறிவிப்பு - குறிஞ்சிப்பாடியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
Ø எட்டாவது அறிவிப்பு – காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் மற்றும் புவனகிரி பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 63 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். (திரு.சிந்தனைச் செல்வன் அவர்கள் கரவொலி எழுப்புகிறார்).
Ø ஒன்பதாவது அறிவிப்பு - கடலூர் வட்டத்தில், பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை குறைக்க, தென்பெண்ணை ஆற்றில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
Ø பத்தாவது அறிவிப்பு – இன்றைக்கு உலகத் தாய்மொழிகள் நாள்! நம்முடைய தாய்மொழியான தமிழைக் காக்க தன்னுயிரை ஈந்த மாணவர் ராசேந்திரனின் நினைவிடம் புதுப்பிக்கப்படும்!