ஜெர்மனை சேர்ந்த சர்வதேச நிதி சேவை நிறுவனம் அலையன்ஸ் எஸ்இ. இந்நிறுவனம் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மையில் சர்வதேச தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் ஜெர்மனியின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். 24 ஆண்டுகளுக்கு முன் அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் பஜாஜ் குழுமத்துடன் இணைந்து இந்திய இன்ஸ்யூரன்ஸ் சந்தையில் களம் இறங்கியது. பஜாஜ் குழுமம் மற்றும் அலையன்ஸ் எஸ்இ ஆகியவை கூட்டு வணிகத்தில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (பிஏஜிஐசி) மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (பிஏஎல்ஐசி) ஆகிய 2 நிறுவனங்களை தொடங்கியன.
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (பிஏஜிஐசி) மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (பிஏஎல்ஐசி) ஆகிய 2 நிறுவனங்களிலும் தலா 26 சதவீத பங்குகளை அலையன்ஸ் எஸ்இ கொண்டு இருந்தது. இந்த கூட்டு வர்த்தக நிறுவனங்கள் தொடங்கியது முதல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நன்றாக செயல்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த அக்டோபரில், அலையன்ஸ் நிறுவனம் கூட்டு காப்பீட்டு வணிகத்தில் இருந்து வெளியேறும் நோக்கத்தை வெளிப்படுத்தியாக பஜாஜ் பின்சர்வ் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது பஜாஜ் குழுமத்துடான அதன் இந்திய காப்பீட்டு கூட்டு வணிகங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் உள்ள பங்கினை ரூ.24,600 கோடிக்கு பஜாஜ் குழுமத்துக்கு விற்பனை செய்ய அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த செய்தி காப்பீட்டு சந்தையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் உடனான ஆக்கபூர்வமான மற்றும் இணக்கமான பேச்சுவார்த்தைகளின் விளைவாக நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி சந்தைகளில் ஒன்றாக இந்தியா தொடர்கிறது. அலையைன்ஸ் தனது நிலையை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகளை ஆராயும். முதலீட்டாளராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் பணியாற்றுவதற்கான அதன் திறனை வெளிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் அலையன்ஸ் எஸ்இ நிறுவனத்திடமிருந்து தலா 26 சதவீத பங்குகளை வாங்க பஜாஜ் ஃபின்சர்வ் சம்மதம் தெரிவித்துள்ளது.
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் அலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு முறையே ரூ.13,780 கோடி மற்றும் ரூ.10,400 கோடியை அந்நிறுவனத்துக்கு வழங்க பஜாஜ் ஃபின்சர்வ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதல் பகுதியாக குறைந்தபட்சம் 6.1 சதவீத பங்குகளை பஜாஜ் ஃபின்சர்வ் வாங்கியதும், அலையன்ஸ் நிறுவனம் புரோமோட்டர் என்பதலிருந்து முதலீட்டாளராக மறுவகைப்படுத்தப்படும். மேலும், நீண்ட கால கூட்டு வணிக ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும். மேலும், இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 1.01 சதவீத பங்குகளை வாங்கும்.
பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் 19.55 சதவீத பங்குகளை வாங்கும் மற்றும் ஜம்னாலால் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் 5.04 சதவீத பங்குகளை வாங்கும். இப்படி இந்த 2 நிறுவனங்களிலும் உள்ள அலையன்ஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகள் வாங்கப்பட உள்ளது. இந்த பரிவர்த்தனை இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) உள்ளிட்ட ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்று பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலை தொடர்ந்து, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் பஜாஜ் ஃபின்சர்வின் பங்கு மூலதனம் தலா 75.01 சதவீதமாக உயரும். இது இந்த நிறுவனங்களில் பஜாஜ் குழுமத்தின் பிடியை உறுதிப்படுத்தும்.
பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் அலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் 11.13 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.4,808..24 என்ற அடிப்படையில் வாங்க உள்ளது. அதேபோல் அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் வசம் உள்ள பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியின் 15.22 லட்சம் ஈக்விட்டி பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.2,654.12 விலையிலும் பஜாஜ் ஃபின்சர்வ் கையகப்படுத்த உள்ளது. பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், அலையன்ஸூடன் இணைந்து இந்தியாவில் இரண்டு வலிமையான காப்பீட்டு நிறுவனங்களை நாங்கள் கட்டியெழுப்பியுள்ளோம். மொத்த பிரீமியம் ரூ.40,000 கோடியை தாண்டியுள்ளது.
அதேநேரத்தில், தொழில்துறையில் சிறந்த சால்வன்சி மார்ஜின்ஸ் ( காப்பீட்டு நிறுவனம் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க, வைத்திருக்க வேண்டிய கூடுதல் மூலதனமாகும்) பராமரிக்கிறது. இரண்டு நிறுவனங்களிலும் ஒரே உரிமையின் நன்மையை கருத்தில் கொண்டு, கையகப்படுத்துதல் வரும் ஆண்டுகளில் எங்கள் பங்குதாரர்களுக்கு மதிப்பின் பெரிய இயக்கியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார். அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் வசம் உள்ள பங்குகளை பஜாஜ் ஃபின்சர்வ் வாங்க உள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் 2 குறைந்து ரூ.1,845ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.73 சதவீதம் உயர்ந்து ரூ.1.858.55ஆக இருந்தது.
காப்பீட்டு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காப்பீட்டு (திருத்த) மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் நிறைவேற்ற அதிக வாய்ப்புள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீத முதலீட்டில் இன்ஸ்யூரன்ஸ் நிறுவன்ங்ளை சுயமாக தொடங்கலாம். இதனை கணக்கில் கொண்டுதான் ஜெர்மனை சேர்ந்த அலையன்ஸ் எஸ்இ நிறுவனம் பஜாஜ் குழுமத்துடான கூட்டு இன்ஸ்யூரன்ஸ் வணிகங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் இந்திய காப்பீட்டு சந்தையில் முதலீட்டாளராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் பணியாற்றுவதற்கான அதன் திறனை வெளிப்படுத்தும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.