ARTICLE AD BOX
செய்தியாளர்: மருது பாண்டி
நெல்லை கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்ற ரவி. இவர், கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஓரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியனின் 2வது மகள் மகாலட்சுமி, நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில், இன்று குழந்தைகளை கல்லூரி மற்றும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு கொக்கிரகுளம் பகுதியில் வழக்கமாக கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தான் வேலை செய்யும் கொக்கிரகுளம் கஜேந்திரன் என்பவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மின்கசிவு ஏற்பட்டு கஜேந்திரன் மகன் வேலாயுதம் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை காப்பாற்றச் சென்ற சுப்பிரமணியம் என்ற ரவி மீதும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு தேர்வெழுதச் சென்ற சுப்பிரமணியன் என்ற ரவியின் மகள் மகாலட்சுமி தேர்வெழுதி விட்டு வீடு திரும்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது. தந்தை இறந்த தகவலறிந்து கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களை குளமாக்கியது.
இது தொடர்பாக மாணவி மகாலட்சுமி கூறும்போது... எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். தந்தையை நம்பியே எங்கள் குடும்பம் இருந்து வருகிறது. தேர்வெழுத பள்ளிக்குச் சென்றபோது வழியனுப்பிய தந்தை வீட்டுக்கு திரும்பும்போது இல்லை. நாங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பது தந்தையின் ஆசை. இன்னும் 2 தேர்வுகள் உள்ளது. நல்லபடியாக அதனை எழுத உள்ளேன். அரசு எங்கள் குடும்பத்திற்கு உதவிட வேண்டும். வேலைவாய்ப்பை வழங்கி உதவி செய்யே வண்டும் என்று கோரிக்கை வைத்தார்.