நீர்ச்சத்து குறைபாட்டால் அவதி: ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் அட்மிட்

11 hours ago
ARTICLE AD BOX

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான், நேற்று காலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டதே இதற்கு காரணம் எனக்கூறப்பட்டது.

இதுகுறித்து ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “எங்களின் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம்விரும்பிகளுக்கு அவர்களின் அன்பு பிரார்த்தனை மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியின்னைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தந்தை நீர்சத்து குறைபாடு காரணமாக பலவீனமாக இருந்தார். அதனால் நாங்கள் வழக்கமான சில பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் இப்போது நலமாக உள்ளார் என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்களின் அக்கரையையும் ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.” என்று தெரிவித்தார். பரிசோதனைகள் முடிந்து, சிகிச்சைக்கு பிறகு ரஹ்மான் நலமாகி நேற்றே வீடு திரும்பினார்.

* நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இசைப்புயல் ஏ.ஆர்,ரஹ்மான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர், மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

Read Entire Article