ARTICLE AD BOX
நம்முடன் பழகுபவர்கள் எப்போதும் நமக்கு நல்லது நினைப்பது போலதான் தோன்றும். ஆனால், ஏதோ ஒரு எண்ணம் மனதிற்குள் தோன்றிக்கொண்டே இருக்கும். ‘இவர்கள் உண்மையாக நல்லவர்தானா? அல்லது நடிக்கிறாரா?’ என்ற எண்ணம்தான் அது. தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து தனது நலனில் மட்டுமே அக்கறை செலுத்துபவர்கள் பலர் நம்மைச் சுற்றி இருப்பர். அவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதற்கு ஒரு ஐந்து நிமிடமே போதும்.
ஐந்து நிமிட டெஸ்ட்: ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம்தான். ஆனால், நாம் இருக்கும் சூழலை வைத்து அவர்களுடன் தொடர்ந்து பழகலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். அவர்களிடம் ஐந்து நிமிடத்தில் கணிக்கக்கூடிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.
பிறரை எப்படி நடத்துகின்றனர்: ஒருவர் தனக்குக் கீழ் வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறார் அல்லது தனக்கு மேல் வேலை செய்பவரிடம் இவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனவே ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால் அவர் ஒரு ஹோட்டல் வெயிட்டரையோ, வாட்ச்மேனையோ, சுத்தம் செய்பவரையோ எப்படி நடத்துகிறார் என்பதை உற்றுநோக்க வேண்டும். அவர்களுக்கு அவர் மரியாதை கொடுக்காமல் நடத்துகிறார் என்றால் அவர் நல்லவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. நல்ல மனம் கொண்டவர்கள், யாரையும் தராதாரம் அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதையுடன் நடத்துவர்.
கேட்கும் திறன்: நீங்கள் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது வேறு ஒருவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதோ அவர் இடைவெளி இல்லாமல் அந்த விஷயத்தைக் கேட்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். அங்கு நடந்து கொண்டிருக்கும் உரையாடல் அவரைப் பற்றி இல்லை என்றால் அவர் கவலை கொள்கிறார் அல்லது அந்த உரையாடல் தன்னைப் பற்றி இருக்க வேண்டும் என தலைப்புகளை மாற்றுகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். நல்ல மனம் கொண்டவர்கள் பிறர் கூறுவதை காது கொடுத்து கேட்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
புரிந்துணர்வு: ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதைத் தெரிந்துகொள்ள உங்களைப் பற்றிய ஏதேனும் ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயத்தை முதலில் பகிருங்கள். அவர்கள் அந்த விஷயத்தைப் புரிந்து கொண்டு உங்களுக்கு பதில் அளிக்கின்றனரா அல்லது அப்படியே அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனரா என்பதைப் பார்க்க வேண்டும். நல்ல மனம் கொண்டவர்கள் பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பேச்சு - நடவடிக்கை: சிலர் பேசும் அல்லது நடந்துக்கொள்ளும் விஷயங்களை வைத்தே அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை கணித்து விட முடியும். யாசகம் கேட்பவர்களுக்கு காசு கொடுக்கிறார்களா, உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்கிறார்களா என்பது போன்ற விஷயங்களைப் பார்க்க வேண்டும்.
உள் மனசு: வெளியில் நடந்துகொள்ளும் விஷயங்களை வைத்து, ஒருவரை எடை போட முடியவில்லை என்றாலும், உங்கள் உள் மனம் என்ன கூறுகிறது என்பதை கேளுங்கள். சில சமயங்களில் ஒருவர் மிகவும் நல்லவராகத் தோன்றினாலும், அவரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என நம் மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். அப்போது, அவரிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது.