ARTICLE AD BOX
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வன்முறையின் போது பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதாக புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் அதிகாரிகள் மீது ஆபாச சைகை
மார்ச் 17ஆம் தேதி மாலை 4 மணியளவில் தொடங்கி இரவு 11.30 மணி வரை நீடித்த இந்த சம்பவத்தின் போது, வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர், காவல்துறை அதிகாரிகள் உட்பட வேறு சில பெண்களிடம் ஆபாசமான சைகைகளைச் செய்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரக் கட்டுப்பாட்டுப் படையைச் சேர்ந்ததாகக் கூறப்படும் காவலரின் உடலையும் சீருடையையும் தவறான நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தொட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஔரங்காபாத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் நாக்பூரின் பல பகுதிகளில் வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் புனித நூலான குர்ஆனை வலதுசாரிக் குழு எரித்ததாக வதந்திகள் காரணமாக கலவரம் பரவியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை புனேவில் உள்ள மஹால் வாயிலில் போராட்டம் நடத்தின. டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, போராட்டக்காரர்கள் குறிப்பட்ட மதத்தின் புனித துணியையும் எரித்ததாகக் கூறப்படுகிறது.
நாக்பூரில் உள்ள மஹால் மற்றும் ஹசன்புரி பகுதிகளில் வன்முறை வேகமாகப் பரவிய நிலையில், கலவரக்காரர்கள் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீ வைத்தனர். இதன் விளைவாக நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 பேருக்கு போலீஸ் காவல்
கடந்த திங்கள்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பணியில் இருந்த கணேஷ்பேத் காவல் நிலைய துணை ஆய்வாளர் ஜிதேந்திர பாபுராவ் காட்கே என்பவரால் மார்ச் 18 அன்று 0115 என்ற எண் கொண்ட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாக்பூர் வன்முறை தொடர்பாக 51 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் அதே எஃப்.ஐ.ஆரில் 51 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் 500-600 பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
நாக்பூர் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரை நீதித்துறை முதல் வகுப்பு நீதிமன்றம் (ஜே.எம்.எஃப்.சி) மார்ச் 21 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. நாக்பூர் போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் விசாரணைக்காக அவர்களை காவலில் எடுக்கக் கோரினர்.
அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்
இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது மகாராஷ்டிர அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அரசு நிலைமையை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாதவாறு காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார்
ஒசாமா பின்லேடனுடன் ஔரங்கசீப் ஒப்பிட்ட ஏக்நாத் ஷிண்டே
17ஆம் நூற்றாண்டின் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான சர்ச்சையின் மத்தியில், ஒசாமா பின்லேடனின் அடக்கத்தை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என்பதை மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒப்பிட்டார்.
கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரை அமெரிக்கா தனது நிலத்தில் அடக்கம் செய்ய மறுத்து, எந்தவிதமான மிகைமைப்படுத்தலையும் தடுக்க அவரது உடலை கடலில் அப்புறப்படுத்தியது என்று சிவசேனா தலைவர் கூறினார்.
"ஔரங்கசீப் யார்? நமது மாநிலத்தில் அவரது மகிமைப்படுத்தலை ஏன் அனுமதிக்க வேண்டும்? அவர் நமது வரலாற்றில் ஒரு கறை" என்று ஏக்நாத் ஷிண்டே சட்டப்பேரவை குழு விவாதத்தில் கூறினார்.
"ஒசாமா பின்லேடனைக் கொன்ற பிறகு, அமெரிக்கா கூட, அவர் தங்கள் நிலத்தில் அடக்கம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தது. எந்தவொரு மிகைமைப்படுத்தலையும் தடுக்க அவர்கள் அவரை கடலில் அப்புறப்படுத்தினர்," என்று ஷிண்டே மேலும் கூறினார்.
நாக்பூர் வன்முறையை துரதிர்ஷ்டவசமானது. காயமடைந்தவர்களில் நான்கு டிசிபி-நிலை அதிகாரிகள் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
நாக்பூர் கலவரம் பின்னணி
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டம் ஹன்சபுரியில் மஹால் பகுதி உள்ளது. இங்கு திடீரென நேற்று முன்தினம் (மார்ச் 17) திங்கட்கிழமை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மகாராஷ்டிராவில் இருந்து முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் மீது தீ வைத்தனர்.மேலும் அருகில் இருந்த வீடுகளையும் கொளுத்திவிட்டனர். அத்துடன் அந்த பகுதியில் இருந்த வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மஹால், கணேஷ்பத், கோட்வாலி உள்ளிட்ட பல இடங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் காவல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

டாபிக்ஸ்