ARTICLE AD BOX
நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நிறுத்தப்பட்டது. பின்னர், 2023-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் - காங்கேசன் இடையே கப்பல் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
வானிலை மாற்றம் காரணமாக நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த சேவை வழக்கமாக இடைநிறுத்தப்படும். கடந்த நவம்பரில் நிறுத்தப்பட்ட இந்த சேவை, வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் மீண்டும் தொடங்கியது.
அதன்படி, முதலாவது கப்பலில் 83 பயணிகள் பயணம் செய்தனர். இந்த சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களிலும் இயக்கப்படுகிறது. இதற்கான பயணச்சீட்டுகளை www.sailsubham.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
மேலும், பயணிகள் 10 கிலோ வரை பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதல் பொருட்கள் எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.