ARTICLE AD BOX
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, சங்கர நேத்ராலயா மருத்துவமனையில், சங்கரா நேத்ராலயாவும் VISION 2020: The Right to Sight- India அமைப்பும் இணைந்து, நல்லெண்ண தூதராக பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்தை நியமித்தனர்.
இந்த பொறுப்பினை ஏற்று கொண்ட பிறகு மேடையில் பேசிய ஶ்ரீகாந்த், உடலில் அனைத்து பாகமும் முக்கியம் தான் ஆனால் அதில் கண் மிகவும் முக்கியமான பகுதி. இந்த காலத்தில் ஒரு நாளைக்கு பல மணிநேரம் செல்போனை பயன்படுத்துகிறோம். எனவே நாம் கண்ணை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று பேசினார்.
தோனி எப்போது ஓய்வு பெறுவார்?
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தோனியின் ஓய்வு குறித்தும், 2025 ஐபிஎல் தொடர் குறித்தும் பேசினார்.
தோனி குறித்து பேசிய அவர், “தோனி எப்போது ஓய்வு பெறுவார் என யாருக்கும் தெரியாது, ஏன் அவருக்கே தெரியாது. இன்னும் சில ஆண்டுகள் கூட அவர் விளையாடுவார். அந்தஅளவுக்கு உடல் பிட்னஸ் உடன் அவர் இருக்கிறார்.
தோனி கடைசி நேரத்தில் இறங்கி அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, அவரது அறிவுக்கூர்மையும் விக்கெட் கீப்பிங் திறமையும் சிஎஸ்கே அணிக்கு பக்கபலமாக இருக்கிறது. சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்” என்று பேசினார்.
மேலும் 2025 ஐபிஎல் தொடரில் எந்த அணி பலமாக இருக்கிறது என்பதற்கு, இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அணிகள் பலம்வாய்ந்த அணிகளாக உள்ளன என்று பேசினார்.
மேலும் அவருடைய கமெண்டரி குறித்து பேசிய அவர், “கிரிக்கெட் வர்ணனையில் தற்போது நான் பயன்படுத்தும் எதார்த்தமான சில வார்த்தைகள் சிறுவயதில் நான் கேட்டு பழகியது, விளையாடும் காலத்தில் பயன்படுத்தியது. அதை தான் தற்போது வர்ணனையின் போது பயன்படுத்துகிறேன். கிரிக்கெட் வர்ணனையின் போது ப்ரொபஷனல் ஆக பேசுவதைவிட எதார்த்தமாக பேசுவதை மக்கள் ரசிக்கின்றனர். அதனால் அதனை தொடர்ந்து செய்கிறேன்” என்று கூறினார்.