ARTICLE AD BOX
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசு அரிசி வழங்குகிறது. 2025-ஆம் ஆண்டிலும் அரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றாக இருப்பது நோன்பு, அந்த வகையில் ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலையில் இருந்து உணவு சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும் விரதம் இருப்பார்கள்.
மாலை நேரத்தில் தான் நோன்பை முடித்து விட்டு உணவு அருந்துவார்கள். ஏழ்மையாக உள்ள மக்களின் பசியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான நோன்பானது வருகிற சனிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறையை தென்பட்டால் நோன்பை கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் ரமலான் மாதத்தில் பள்ளி வாசலில் நோன்பு கஞ்சி வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு சார்பாக அரிசியை வழங்கும்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. 2025-ஆம் ஆண்டு, இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

பள்ளிவாசல்களுக்குத் அனுமதியை வழங்க தேவைப்படும் அரிசிக்கான மொத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 18 கோடியே 41 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.