ARTICLE AD BOX
தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் 5-வது நாளாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது: அமித் ஷா
சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், கடற்படை, எலிவளை சுரங்க தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 4 நாள்களில் இல்லாத வகையில், இன்று மீட்புப் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், எலிவளை சுரங்க தொழிலாளர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர், சுரங்கத்தில் இறுதிவரை சென்று திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் கடைசி 50 மீட்டர் முழுவதும் சேறும் இடிபாடுகளும் இருக்கும் நிலையில், இடிபாடிகளில் சிக்கியுள்ள யாரையும் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையும் சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர், ஆனால், எவ்வித முன்னேற்றமும் அடையாததால் இரவு வெளியேறினர்.
வண்டல் மண் மற்றும் சுரங்கத்துக்குள் தண்ணீர் தொடர்ந்து பாய்வதால், மீட்புக் குழுவினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து மீட்புக் குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சுரங்கத்தின் மண் மாதிரிகளை சேகரித்துள்ள இந்திய புவியியல் ஆய்வுக் குழுவினர் மண்ணின் வலிமை மற்றும் பிற ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.
மேலும், சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் அமைச்சர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.