ARTICLE AD BOX
செய்தியாளர்: பால வெற்றிவேல்
உலகளவில் தென்கொரியா பிறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. இறப்பை விட பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அந்த நாட்டின் தற்போதைய மக்கள் தொகையான 5.18 கோடியான இருக்கிறது. ஆனால், 2050க்கு பிறகு 3 கோடியாக குறையும் என கணிக்கப்பட்டது. திருமணம் குழந்தை பிறப்பு தொடர்பாக சமூக மனப்பான்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்ட காரணங்களினால் 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்தது.
திருமணம் மற்றும் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க வரி குறைப்பு மற்றும் மானியங்கள் உள்ளிட்ட நிதி ஊக்கத்தொகைகள் போன்றவை தென்கொரிய அரசால் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தென்கொரிய நாட்டில் திருமணம் செய்து கொள்வோர் எண்ணிக்கை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்தது. அதன் விளைவாக 9 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதுவும் 0.75 சதவீத உயர்வு என்பது 1980 களுக்குப் பிறகு அந்த நாட்டில் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்கொரியாவில் திருமணம் செய்து கொண்டோரின் எண்ணிக்கையும் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்கொரியாவின் அதிக வாழ்க்கைச் செலவு, கல்விஇ வேலைவாய்ப்பில் கடுமையான போட்டி பாலின சமத்துவமின்மை போன்றவை குறைந்த பிறப்பு விகிதங்களுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
பல இளைஞர்கள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று உணர்வதாக அறிக்கைகள் தெரிவித்த நிலையில், அதை சீர்படுத்துவதற்காக தென்கொரிய அரசு கடந்த ஐந்து வருடங்களாக முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உலக அளவில் தென்கொரியாவிற்கு அடுத்தபடியாக ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. உலக அளவிலேயே பிறப்பு விகிதம் குறைந்து வருவது உலக சுகாதார நிறுவனம் வருடம் தோறும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.