ARTICLE AD BOX
துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் போட்டிகளின் 2வது சுற்றுப் போட்டிகளில் நேற்று மாரின் சிலிக், பெலிக்ஸ் அகர் அலியாஸிமே அபார வெற்றி பெற்றனர். துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ், கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலியாஸிமே மோதினர். இரு வீரர்களும் சமபலத்துடன் ஆடியதால் முதல் இரு செட்களில் ஆளுக்கொன்றை கைப்பற்றினர். வெற்றியை தீர்மானிக்கும் விறுவிறுப்பான 3வது செட்டை பெலிக்ஸ் கைப்பற்றினார்.
இதனால், 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அவர் வென்றார். மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸி பாபிரின், குரோஷிய வீரர் மாரின் சிலிக் மோதினர். முதல் இரு செட்களில் இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றினர். பின்னர், சுவாரசியமாக நடந்த 3வது செட் சிலிக் வசமானது. இதனால், 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிலிக் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
போபண்ணா இணை தோல்வி
ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷிய வீரர் இவான் டோடிக் இணை, பிரிட்டனின் ஜூலியன் கேஷ், லாயிட் கிளாஸ்பூல் இணையுடன் மோதியது. இந்த போட்டியில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டனின் இணை அபார வெற்றி பெற்றது.
The post துபாய் ஓபன் டென்னிஸ்: சிலிக், பெலிக்ஸ் வெற்றி appeared first on Dinakaran.