ARTICLE AD BOX
மஹாபாரதத்தின் கதைநாயகி திரௌபதி ஆவார். அக்னியில் இருந்து தோன்றிய திரௌபதி, மிகப்பொலிவுடன் காண்பவர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்தாள். கருமையான நிறத்தில் இருந்ததால் கிருஷ்ணை என்ற பெயர் திரௌபதிக்கு சூட்டப்பட்டது. திரௌபதனின் மகள் என்பதால் திரௌபதி என்று அழைக்கப்பட்டாள்.
திரௌபதியின் அழகு மற்றும் அறிவு எட்டுத்திக்கும் பரவியது. பல நாட்டு மன்னர்கள் திரௌபதியை மணம் செய்ய விரும்பினார்கள். ஆனால், திரௌபதியோ அது பற்றி எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தாள்.
திரௌபதிக்கும் அர்ஜூனனுக்கும் உற்ற சிநேகிதனாக ஸ்ரீ கிருஷ்ணர் இருந்தார். இருவர் மனதிலும் ஒருவரைப் பற்றி ஒருவரை புகழ்ந்து பேசி ஆசையை வளர்த்தார். துருபத மன்னன் திரௌபதிக்கு சுயம்வரம் நடத்த அறிவிப்பை வெளியிட்டார். திரௌபதியின் சுயம்வரத்தில் பல நாட்டு மன்னர்களும் இளவரசர்களும் கலந்து கொண்டார்கள். பலருக்கும் திரௌபதியை மனைவியாக்க விருப்பம் இருந்தது. அதில் மாவீரன் கர்ணன் முதன்மையானவனாக இருந்தான்.
திரௌபதியைப் பற்றி அறிந்த காலத்திலிருந்தே கர்ணன் அவளை மனதிற்குள் விரும்ப ஆரம்பித்தான்.
திரௌபதியை நேரில் சந்தித்ததில் இருந்து, அவளது அழகில் கர்ணன் மயங்கி இருந்தான். சிறந்த வில்லாளனான தன்னால் எளிதில் போட்டியில் வென்று திரௌபதியை மணக்க முடியும் என்று சுயம்வரத்தில் மிக மகிழ்ச்சியாக கர்ணன் கலந்துக் கொண்டான். திரௌபதிக்கு கர்ணன் மீது மதிப்பு இருந்த போதிலும் ஶ்ரீ கிருஷ்ணர் அவளை அர்ஜூனன் பக்கம் திருப்பி இருந்தார்.
அஸ்தினாபுரத்தின் இளவரசனாக இருந்த துரியோதனனுக்கும் திரௌபதியின் மீது மானசீக காதல் இருந்தது. பெரும் சக்கரவர்த்தியாக இருக்கும் தன்னால் எப்படியும் அவளை மணக்க முடியும் என்று நம்பி அவனும் சுயம்வரத்தில் கலந்து கொண்டான். திரௌபதியின் மீதான அவனது நிறைவேறாத ஒருதலைக் காதல்தான் பின்னாளில் அவனை பழிவாங்க தூண்டியது. அதே நேரம் சுயம்வரத்தில் தன்னுடைய நண்பன் கர்ணன் கலந்து கொண்டதை அவன் தடுக்கவில்லை. போட்டியில் ஒருவேளை தான் தோற்றாலும் கர்ணன் வென்று திரௌபதியை மணக்கட்டும் என்று நினைத்தான்.
சுயம்வரத்தில் கர்ணன் வில்லினை தொட வந்த போது, கிருஷ்ணர் திரௌபதிக்கு கண் சிமிட்டி குறிப்பை உணர்த்தினார். உடனே திரௌபதி கர்ணனை அவமானம் செய்து வில்லினை தொடாதே என்று திட்டி அவனை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினாள். அதன் பிறகு போட்டிக்கு வந்த துரியோதனன், வில்லினை தூக்க முடியாமல் திணறிய போது அவனை பார்த்து திரௌபதி கேலி செய்து சிரித்தாள்.
அடுத்ததாக துரியோதனின் மைத்துனர் ஆகிய சிந்து நாட்டின் மன்னன் ஜெயத்ரதன் சுயம்வரத்தில் கலந்து கொண்டான். அவனுக்கும் திரௌபதி மீது தீராத மையல் இருந்தது. ஆனாலும் போட்டியில் தோற்றான். சேதி நாட்டின் மன்னன் சிசுபாலன் , மாத்ரியின் சகோதரன் சாலவன், சல்லியன், அயோத்தி மன்னன் பிருஹத்பாலன் பலரும் சுயம்வரத்தில் கலந்து கொண்டு போட்டியிட்டு தோற்றனர். இறுதியில் அர்ஜூனன் அந்தணர் வேடத்தில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்று திரௌபதியை மணந்தான். குந்தியின் வாக்கின் காரணமாக பாண்டவர்கள் அனைவரும் திரௌபதியை மணந்தனர். பாண்டவர்கள் அனைவரும் திரௌபதியை மிகவும் நேசித்தனர், மதிப்பும் மரியாதையுடனும் நடத்தினர்.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஜெயத்ரதன் திரௌபதியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கடத்திச் செல்ல முயன்ற போது அவனைப் பிடித்த பீமன், அவனது தலைமுடியை வெட்டி அவமானப்படுத்தி விரட்டி விட்டான். பாண்டவர்கள் வனவாசத்தின் இறுதி காலத்தில் விராட நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்தனர். அங்கு திரௌபதியை பார்த்து, விராட நாட்டின் தளபதி கீசகன் காதல் வயப்பட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். இதை அறிந்த பீமன் கீசகனை வதம் செய்தான்.