ARTICLE AD BOX
நெல்லை,
அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் வழங்கிய அல்வாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார். பின்னர் இருட்டுக் கடை என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்று கடை உரிமையாளர்களிடம் கேட்டார்.
முந்தைய காலத்தில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்பனை நடைபெற்றதாகவும், அப்போது மக்கள் அந்த கடையை 'இருட்டாக இருக்கும் கடை' என்று கூறி அழைத்ததால் 'இருட்டுக் கடை' என்று பெயர் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர். தொடர்ந்து அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து கேட்டு தெரிந்து கொண்ட முதல்-அமைச்சர், பணம் கொடுத்து அல்வா வாங்கிச் சென்றார்.